நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்: சிவி சண்முகம் பரபரப்பு பேச்சு

அதிமுகவை எவராலும் எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாத நிலைக்கு எடப்பாடி பழனிசாமி இன்று கொண்டு வந்துள்ளார் என்று சிவி சண்முகம் பேசினார்.
நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்: சிவி சண்முகம் பரபரப்பு பேச்சு
Published on

சென்னை,

அதிமுக பொதுக்குழுவில் மாநிலங்களவை எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நம்மை (அதிமுக) அழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதில் எதிரி திமுக மட்டும் இல்லை; துரோகிகள் மட்டும் இல்லை. நம்மோடு உறவாடிக் கொண்டு இருப்பவர்களும் இதில் இருக்கிறார்கள். எதிரி நமக்கு யார் என்று தெரியும் திமுக, கருணாநிதி, ஸ்டாலின். நம்முடைய துரோகி யார் என்றும் தெரியும்.

ஆனால், நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். சில அரசியல் புரோக்கர்கள் இருக்கிறார்கள்; அவர்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களை நாம் இனம் கண்டு கொள்ள வேண்டும். அப்படி இனம் கண்ட காரணத்தில்தான், பல்வேறு சூழ்ச்சிகள், சதித்திட்டங்கள் தீட்டினாலும் அதிகார பலம், ஆட்சி பலம், பண பலம் என இத்தனையையும் முறியடித்து இந்தக் கட்சியை நிலைநிறுத்தி, அதிமுகவை எவராலும் எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாத நிலைக்கு எடப்பாடி பழனிசாமி இன்று கொண்டு வந்துள்ளார்.

இதே நிலைமை அதிமுகவிற்கு வந்த நிலை, திமுகஸ்டாலினுக்கு வந்து இருந்தால் நிலைமை என்ன? ஆனால் இப்படிப்பட்ட இயக்கத்தை சில ஊடகங்கள், பத்திரிகைகளில் "கணிப்பு" என்ற பெயரில் இன்று செய்தி வெளியிட்டு வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் 100 நாள் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு இன்னும் 100 நாள்தான் இருக்கிறது. கவுண்டவுன் ஸ்டார்ட். ஆனால் அதற்குமுன்பாக இந்த பத்திரிகைகள், ஊடகங்கள் மூலம் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மன உறுதியை குலைப்பதற்கு, அதிமுக தொண்டர்களின் மன உறுதியை குலைக்க மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்படுகிறது" இவ்வாறு அவர் பேசினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com