தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதைக் கைவிட வேண்டும் - டி.டி.வி.தினகரன்

தூய்மைப் பணியாளர்களை கோரிக்கையை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் தனியார் மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையைக் கைவிட்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும்.

தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதைக் கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் இறுதியில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டத்தின் போது பேச்சுவார்த்தை எனும் பெயரில் அழைத்து பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்த மதுரை மாநகராட்சி நிர்வாகம், தற்போதுவரை அவற்றை நிறைவேற்ற எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

ஆட்சிப்பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தேர்தலுக்கு முன்பாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், மின்வாரிய மற்றும் போக்குவரத்து ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினருமே போராடிக் கொண்டிருப்பது திமுக அரசு நிர்வாகத்தின் படுதோல்வியையே வெளிப்படுத்துகிறது.

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தின் மீது வன்முறையை ஏவிக் கலைத்துவிட்டு, உடனடி நடைமுறைக்குச் சாத்தியமில்லாத அறிவிப்புகளை வெளியிட்டு திமுக அரசு நடத்திய நாடகத்தை மதுரையிலும் அரங்கேற்ற நினைத்தால் அதற்கான எதிர்வினைகள் கடுமையாக இருக்கும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என மதுரை மாநகராட்சி நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com