

திருச்சி,
திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
விசிக, இடதுசாரிகள் 6 மாத காலம் தாங்குவார்களா? என தெரியவில்லை. தவெக ஆட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அமைச்சர்களாக பதவியேற்றால் கம்யூனிஸ்ட், விசிகவின் மானம் போயிருக்கும். தவெக ஆட்சிக்கு இனி கஷ்டகாலம் தான். தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணியில் இருந்து, தேர்தலுக்குப் பின் பதவிக்காக இன்னொரு கூட்டணிக்கு செல்கின்றனர்.
முதல்-அமைச்சர் விஜய் இன்ஸ்டா ரீல்ஸ் ஆட்சியில் இருந்து ரியல் ஆட்சிக்கு வர வேண்டும். அதிமுகவை ஊழல் கட்சி எனக் கூறிய விஜய் தற்போது அவர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். செங்கோட்டையன் சட்டைப் பையில் ஜெயலலிதாவின் படத்தை வைத்துக்கொண்டு அதிமுகவை அழிக்கப் பார்க்கிறார். அதிமுகவை அழிக்க துணைபோகும் செங்கோட்டையனை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது.
அதிமுகவை அழிக்க நினைக்கும் விஜய்க்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருவது எந்த வகையில் நியாயம்?. எடப்பாடி பழனிசாமி நியமிக்கும் கொறடாவின் உத்தரவுதான் செல்லும். தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோகும். அமமுக சார்பில் வெற்றிபெற்ற காமராஜுக்கு அமைச்சர் பதவி வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும். அமமுக, அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ விசாரணை கோருவோம். இவ்வாறு அவர் கூறினார்.