அரிட்டாபட்டியிலிருந்து ஒரு பிடிமண்ணைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் - சு.வெங்கடேசன் எம்.பி.

அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதிகளில் கனிமம் எடுக்கத்துடிக்கும் முயற்சியை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள் என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மதுரை,

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் இருந்து ஒரு பிடிமண்ணைக்கூட, எடுக்க அனுமதிக்கமாட்டோம் என்று மதுரை எம்பி. சு.வெங்கடேசன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கனிமத் துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சி, இந்தியாவின் தொல்லியல், கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும். இந்த நோக்கத்தை உறுதி செய்வதற்காக ஒன்றிய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் இதர முகமைகள் நிர்ணயித்துள்ள விதிமுறைகள் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியிலும் பின்பற்றப்படும்" எனத் தெரிவித்துள்ளது சுரங்கங்கள் அமைச்சகம். இதன்மூலம் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய கனிமத்தொகுதியை டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக ஹிந்துஸ்தான் ஜிங்க் லிலிடெட் நிறுவனத்திற்கு வழங்கிய ஏலத்தை ரத்து செய்ய முடியாது என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளது ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம்.

தமிழ் மற்றும் தமிழர் வரலாற்றின் பெருமைமிகு அடையாளங்கள், உயிர்ப்பன்மைய வளமிக்க சூழல் அமைவுகள், உயிரினங்கள் மற்றும் பல நூற்றாண்டுகால வரலாறு கொண்ட தமிழர் வழிபாட்டுத் தலங்களை உள்ளடக்கிய இடம்தான் இந்த கனிமத் தொகுதி. இதைக் கடிதம் வாயிலாகவும் நேரில் சந்தித்தும் விளக்கிய பின்னரும் ஒன்றிய அரசு தன் முடிவிலிருந்து பின்வாங்க மறுக்கிறது.

தமிழ் மற்றும் தமிழர் உணர்வுகளையும் உரிமையும் துச்சமென மதிக்கும் பா.ஜ.க. அரசின் அணுகுமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டுதான் ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகத்தின் இந்த முடிவாகும்.

அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதிகளில் கனிமம் எடுக்கத்துடிக்கும் முயற்சியை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள். பா.ஜ.க. அரசு கூறுவதுபோல தொல்லியல், கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரிய பாதுகாப்பு ஆகியவை டங்க்ஸ்டன் எடுப்பதற்கான சுரங்கப் பணிகளுடன் கைகோர்த்து நடக்கவே முடியாது.

அரிட்டாபட்டியை உள்ளடக்கிய சுரங்கத் தொகுதிக்குள் ஆய்வுக்காகக் கூட ஒரு பிடிமண்ணை ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்பதைக் கூறிக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com