'நீட்' தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறும்வரை ஓயமாட்டோம் -அமைச்சர் பேட்டி

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறும்வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
'நீட்' தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறும்வரை ஓயமாட்டோம் -அமைச்சர் பேட்டி
Published on

தஞ்சாவூர்,

தஞ்சையில், தமிழ்நாடு மகளிர் ஆணையம் மற்றும் தேசிய இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு சார்பில் சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓயமாட்டோம்

நீட் தேர்வில் இருந்து தமிழகம் முழுவதும் விலக்கு பெறும்வரை நாங்கள் ஓயமாட்டோம். எதிர்க்கட்சியாக இருக்கும்போதும், தற்போது ஆளும் கட்சியாக இருந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றியும் மத்திய அரசு காதில் போட்டுக்கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

நீட் தேர்வு விவகாரத்தில் 22 பேருக்கு மேல் நம் குழந்தைகளை இழந்திருக்கிறோம். இதனை பார்த்தும்கூட இன்னமும் மனம் இரங்காமல் இருக்கிற மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. இதில் குறைந்தது சுமார் 50 லட்சம் பேரிடமாவது கையெழுத்து வாங்கவுள்ளோம். நீட் தேர்வை ஒழித்தே தீருவோம் என இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளோம்.

கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com