பாபாசாகேப் விரும்பிய சமத்துவ இந்தியாவை கண்டே தீருவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சாதி எனும் அழுக்கினை அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சாதி எனும் ஆயிரமாண்டு அழுக்கினை அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளர் - தனக்குவமை இல்லாத புத்துலகப் புத்தர் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாள்... சமத்துவ நாள்! ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நம் பயணத்தில் என்றும் நம்மை வழிநடத்தும் அறிவுலகச் சூரியன் அம்பேத்கர் வாழ்க!
'எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலக்கை நோக்கிய நமது திராவிட மாடல் பயணத்தில், பாபாசாகேப் விரும்பிய சமத்துவ இந்தியாவை கண்டே தீருவோம்! ஜெய்பீம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






