தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற தி.மு.க.விடம் ஆதரவு கேட்போம்: மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே

தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற தி.மு.க.விடம் பா.ஜனதா ஆதரவு கேட்கும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற தி.மு.க.விடம் ஆதரவு  கேட்போம்: மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே
Published on

சென்னை,

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரியும், இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவருமான ராம்தாஸ் அத்வாலே சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் தலித்கள் மீதான வன்கொடுமைகள், கொலை சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 8 ஆயிரத்து 352 கலப்பு திருமணங்கள் நடந்துள்ளன. இது வரவேற்கத்தக்கது. அமைச்சர்கள் சம்பத்குமார், வன்னியரசு அளித்த துறை சம்பந்தமான கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும்.

மசோதாக்கள்

கடந்த முறை தோல்வி அடைந்த பெண்களுக்கான இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை ஆகிய 2 மசோதாக்களும் வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெரும்பான்மையுடன் நிறைவேறும்.இந்தியா கூட்டணியில் காங்கிரஸ்- தி.மு.க. இடையே உறவில் பிளவு, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசில் இருந்து 20 எம்.பி.க்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு மூலம் இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற வாய்ப்பு உள்ளது.

திமுக

காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தி.மு.க. எடுக்கும் அல்லது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பை புறக்கணிக்கும் என எதிர்பார்க்கிறோம். இல்லையென்றாலும் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற ஆதரவு தெரிவிக்குமாறு தி.மு.க.விடம் பா.ஜனதா தலைமை பேச்சுவார்த்தை நடத்தும். தமிழகத்தில் ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது.

தேசிய ஜனநாயக கூட்டணி

த.வெ.க. அரசு ஆட்சியமைக்க தேசிய ஜனநாய கூட்டணி கட்சியின் ஆதரவை கேட்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தி.மு.க. கூட்டணியை சேர்ந்த இதர கட்சிகளின் ஆதரவு பெற்று ஆட்சி அமைத்தது. தமிழக அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும். தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறையை சமூகநீதி துறை என பெயர் மாற்றியது வரவேற்கத்தக்கது.இவ்வாறு ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com