

சென்னை,
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்வதை லட்சியமாகக் கொண்டு வாக்களிப்போம் என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் வணக்கம்! ஏப்ரல் 23. தமிழகத்தின் ஜனநாயகத் திருவிழா நாள். எல்லோரும் சீக்கிரமாகவே எழுந்து தயாராகி, காலை 7 மணியில் இருந்து 12 மணிக்குள்,நமக்குரிய வாக்குச்சாவடிக்குச் சென்று நமது வாக்கினைப் பதிவு செய்திட வேண்டும். குறிப்பாக,முதியவர்களும், பெண்களும் வெயிலுக்கு முன்பாகவே தங்கள் வாக்கினைப் பதிவு செய்துவிடுவது நல்லது.
மேலும்,வாக்காளர்கள் அனைவரும் மதியத்திற்குள் தங்களது வாக்கினைப் பதிவு செய்துவிட்டால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ளலாம். எனவே, ஒருவர் விடாமல், ஒரு வாக்குகூட விடுபடாமல் ‘நம் வாக்கு - நம் உரிமை’ என்பதை உறுதி செய்ய, 100 சதவீதம் விழிப்புணர்வுடன் இருக்கவே இந்த வேண்டுகோள்.
100 சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்வதை லட்சியமாகக் கொண்டு வாக்களிப்போம். ஜனநாயகம் காப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.