

கைத்தறி துணியை வாங்கி நெசவாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என கலெக்டர் மேகநாத ரெட்டி கூறினார்.
கைத்தறி கண்காட்சி
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய கைத்தறிதினத்தை முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ந் தேதி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7-ந் தேதி தேசிய கைத்தறிதினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தேசிய கைத்தறி கண்காட்சி இங்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய ஆணை
இதில் அரசு தள்ளுபடி விலையில் கைத்தறி ஆடைகள் மற்றும் துணிகள் விற்பனை செய்யப்படுகிறது. அனைவரும் இதனை வாங்கி நெசவாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து 20 நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார். மேலும் நெசவாளர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 நெசவாளர்களுக்கு ஒப்பளிப்பு ஆணைகளையும், முத்ரா கடன் உதவி திட்டத்தின் கீழ் 10 நெசவாளர்களுக்கு கடன் உதவி வழங்குவதற்கான ஆணைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் கைத்தறித்துறை உதவி இயக்குனர் ரகுநாத் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.