எஸ்.ஐ.ஆருக்கு வரவேற்பு.. எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம்: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களின் விவரம்

அதிமுக பொதுக்குழுவில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை,
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில முக்கியமான தீர்மானங்களின் விவரம் வருமாறு:
- பொது எதிரியை வீழ்த்த, ஒத்த கருத்துடைய கட்சிகள் கால சூழ்நிலைக்கேற்ப ஒன்றிணைந்து, மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு, தமிழ் நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அதிமுக- பாஜக-வுடன் வெற்றிக் கூட்டணி அமைத்ததற்கு, 2.5.2025 அன்று நடைபெற்ற கழக செயற்குழு கூட்டத்தில் அங்கீகாரம் அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இப்பொதுக்குழு முழுமனதுடன் ஒப்புதல் அளிக்கிறது
- வருகின்ற தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு, `அதிமுக’ தலைமை தாங்குகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை, எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு ஏகமனதாக வழங்குகிறது !
- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையிலும், தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையிலும், ஜெயலலிதா அறிவிப்பின்படி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது!
- கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்ட ஒப்புதலை முறையாக, சரியாக, போதிய புள்ளி விவரங்களோடு அனுப்பாத திமுக அரசின் நிர்வாகத் திறமையற்ற போக்கிற்கு கண்டனம்
- ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவ மழையின் போது, தொடர்மழை, கனமழை, வெள்ளம், புயல் காற்று போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்ற போதும், இயற்கைப் பேரிடரை பாதுகாப்பாக எதிர்கொள்ளவும், மக்களைப் பாதுகாப்பதிலும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்ற ஸ்டாலின் திமுக அரசு!
- ஜனநாயகத்திற்கு தேர்தல் ஒரு பொன் மகுடமாகும். மக்களாட்சித் தத்துவத்திற்கு ஆதாரமாக விளங்குவது மக்களின் வாக்குரிமையே ஆகும்! அத்தகைய
- வாக்குரிமையை நிலைநிறுத்தும் வாக்குப் பதிவு முறையாகவும், சரியாகவும் திகழ வேண்டும் என்பதாலேயே, சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை அதிமுக வரவேற்கிறது.முறைகேடான வாக்காளர் பட்டியல் மற்றும் தில்லு முல்லுகளை நீக்கி, தகுதியான வாக்காளர்களைக் கொண்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்!
- விவசாயிகள் விளைவித்த நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்து, விவசாயிகளைப் பாதுகாக்கவும், நெல்லின் ஈரப் பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்கு, மத்திய அரசின் ஆணையைப் பெற்று, நெல் கொள்முதலை முறையாக, முழுமையாக செய்து முடிக்க வழிவகை செய்து, விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் தி.மு.க. அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது !
- தஞ்சை தரணிக்கு துரோகம் இழைத்து, `தானும் டெல்டாக்காரன்’ என்று தம்பட்டம் அடித்து, வேருக்கு வெந்நீரையும், விவசாயிகளுக்கு கண்ணீரையும் தொடர்ந்து தந்து வரும் ஸ்டாலினுக்கு கண்டனம் !
- அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்! குறையும் முதலீடுகள்! இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள்! தமிழக இளைஞர்களுக்கு எட்டாக்கனியான வேலை வாய்ப்புகள்! தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி, பொய் புரட்டு போலி புள்ளி விவரங்களை அள்ளி வீசும் ஸ்டாலினுக்கு கண்டனம்
- தமிழ் நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறுமிகள், இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்து வருவது வேதனை அளிக்கக்கூடிய நிகழ்வாகும்! காவல் துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற போக்கிற்கு கண்டனம் !
- கடன் தொகையில் மூலதனச் செலவு செய்யாமல், வருவாய் செலவினத்திற்கு ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டு, தமிழக மக்களைத் தொடர்ந்து கடனாளிகளாக்கும் நிர்வாகத் திறனற்ற திமுக ஃபெயிலியர் மாடல் அரசுக்கு கண்டனம்
- தொடரும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள் புழக்கம், கூலிப் படையை ஏவிவிட்டு கொலை, கடத்தல், வழிப்பறி, காவல் துறையினர் முதல் அரசு வழக்கறிஞர்கள், பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகள் வரை பாதுகாப்பற்ற நிலையில் தமிழகத்தை வைத்திருக்கும் நிர்வாகத் திறனற்ற அரசுக்கு கடும் கண்டனம்
- 2021-ல் 525 தேர்தல் வாக்குறுதிகளை திமுக அளித்தது! அவற்றில் மிகக் குறைவான வாக்குறுதிகளை மட்டுமே அறைகுறையாக நிறைவேற்றிவிட்டு, `நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம், 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக்குதல், டீசல், பெட்ரோல் விலை குறைப்பு, சமையல் கேஸ் சிலிண்டர் மானியமாக ரூ. 100 வழங்குதல்’ போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு, எதையும் நிறைவேற்றாமல் `எல்லோருக்கும் எல்லாம்’ என்று ஆசைகாட்டி, அனைத்துத் தரப்பு மக்களையும் ஏமாற்றி வருகின்ற திமுக அரசுக்கு கண்டனம்
- `விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதில் வல்லவர்கள் திமுக-வினர்’ என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. முதலமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்று தொடங்கி மதுரை மேயர் ராஜினாமா என்கிற அளவுக்கு, ஊழல் சாம்ராஜ்யமாகத் திகழும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்
- சமூக நீதியை காவு கேட்கும் திமுக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து தமிழ் நாடே வெட்கித் தலைகுனிகிறது! ஜாதிகள் அற்ற சமத்துவத்தை ஏற்படுத்திட வேண்டும் என்பதே, அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாஆகியோரது கொள்கைகளாகும்! இவற்றிற்கு மாற்றாக, பட்டியலினத்தை இழிவு செய்தும், ஒடுக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதும், திமுக ஆட்சியில் நடந்துகொண்டிருப்பதற்கு கடும் கண்டனம்
- மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிய, தென்னக நதிகளின் இணைப்பு மற்றும் கோதாவரி-காவேரி இணைப்பையும்; ஆனைமலையாறு-பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தைத் தொடர்வதற்கு அக்கறை இல்லாமலும், நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்தத் தவறியும், மேகதாது அணை கட்டுவதாகச் சொல்லும் நடவடிக்கைகளை தடுக்கத் தவறியும், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முழுமையாக செயல்படுத்தத் தவறியும், முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தவறியும், உப்பிலிப்பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை தமிழ் நாட்டிலேயே மிக நீளமான பாலத்தை 1,621 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கழக அரசு கொண்டுவந்த திட்டத்தை, ஸ்டிக்கர் ஒட்டி ஃபெயிலியர் மாடல் திமுக அரசு, தான் கொண்டுவந்ததாக திறப்பு விழா நடத்தி இருக்கும் திமுக அரசை, இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது !
- நீதித் துறை சுயமாக செயல்பட வேண்டுமென்றால் அதன் தனித் தன்மை காப்பாற்றப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட வேண்டுமென்றால், ஆட்சியாளர்களின் தலையீடு இருக்கக்கூடாது. மேலும், ஆட்சியாளர்கள் மிரட்டல் போக்கை கைவிட வேண்டும்; நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும்; அதோடு, நீதித் துறையில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்ற மக்களின் எண்ணத்தை; எதிர்பார்ப்பை இப்பொதுக்குழு பிரதிபலிக்கிறது! நீதித் துறைக்கே சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மையை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது!
- `எம்.ஜிஆர், ஜெயலலிதா தலைவர்களின் வழியிலே செயல்பட்டு, அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவராகத் திகழ்ந்து வரும் எடப்பாடி கே பழனிசாமியை 2026-ல் மீண்டும் முதலமைச்சராக்குவோம் என சூளுரை ஏற்போம் ” இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story






