ஊட்டி வந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு

உலக சுற்றுலா தினத்தையொட்டி ஊட்டி வந்த சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஊட்டி வந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு
Published on

ஊட்டி

உலக சுற்றுலா தினத்தையொட்டி ஊட்டி வந்த சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுற்றுலா தின விழா

ஆண்டுதோறும் செப்டம்பர் 27-ந் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஊட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு என்ற தலைப்பில் உலக சுற்றுலா தின விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கி, கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டம் தேயிலை உற்பத்தியில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு மலைக்காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. பசுமையை மூலதனமாக கொண்டு பல்வேறு சுற்றுலா சார்ந்த தொழில்கள் நீலகிரியில் நடைபெறுவதால், ஆயிரக்கணக்கானார் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இதனால் மாவட்டத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது.

இனிப்பு வழங்கி வரவேற்பு

நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அரசு நிதி ஒதுக்கீட்டில் சுற்றுலா தலங்களில் மேம்பாட்டு பணிகள் மற்றும் புதிதாக அடிப்படை வசதிகளுடன் கூடிய திட்டங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா மாவட்டமான நீலகிரியின் இயற்கை எழில் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து ஊட்டி படகு இல்லத்தில் தூய்மையே சேவை நிகழ்ச்சி ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமையில் நடந்தது. பின்னர் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நிகழ்ச்சி ஊட்டி ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. மேட்டுப்பாளையம், குன்னூரில் இருந்து மலை ரெயிலில் ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சிகளில் சுற்றுலா அலுவலர் உமா சங்கர், படகு இல்ல மேலாளர் சாம்சன் கனகராஜ் கலந்துகொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com