

தர்மபுரியில் நடந்த சுதந்திர தின விழாவில் ரூ.1.81 கோடி மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் சாந்தி வழங்கினார்.
சுதந்திர தின விழா
தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். பின்னர் வண்ண பலூன்களையும், சமாதான புறாக்களையும் பறக்க விட்டார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே. மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 557 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 81 லட்சம் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய 141 அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் சிறந்த மருத்துவமனைகளுக்கு அவர் நற்சான்றிதழ்களை வழங்கினார். இதேபோன்று காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 7 பேருக்கும் கலெக்டர் நற்சான்றிதழ் வழங்கினார்.
கலை நிகழ்ச்சிகள்
இந்த விழாவையொட்டி பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பாக கலை நிகழ்ச்சி நடத்திய மாணவ-மாணவிகளுக்கும், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கும் கலெக்டர் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சப்-கலெக்டர் சித்ரா விஜயன், உதவி கலெக்டர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பசேகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை, முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.