

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். அப்போது பட்டா மாறுதல், உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 242 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ரூ.52 ஆயிரத்து 416 மதிப்பீட்டில் 8 பேருக்கு இஸ்திரி பெட்டிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் பாலசந்தர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, தனிதுணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.