

சென்னை,
மதுரையில் மூடப்பட்டதாக கூறப்பட்ட மூன்று டாஸ்மாக் கடைகளில் ஒன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட கடையின் பார் உரிமையாளர் தவெகவைச் சேர்ந்தவர் என்பதால் இந்தச் சலுகை வழங்கப்பட்டிருக்கலாம் என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் அரசு உத்தரவின் பேரில் மூடப்பட்ட 3 டாஸ்மாக் கடைகளில் ஒன்று மீண்டும் திறக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பிட்ட டாஸ்மாக் கடையின் பார் உரிமையாளர் தவெகவைச் சேர்ந்தவர் என்பதால் இச்சலுகை கிடைத்திருக்கலாம் எனவும் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
"இவங்களே பாம் வைப்பாங்களாம், இவங்களே எடுப்பாங்களாம்" என்பதைப் போல நடக்கும் இந்த தில்லுமுல்லு நாடகங்கள் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு தெரியாமலா நடக்கும்? தவெக நிர்வாகிகளுக்கு கொலை செய்யவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடவும், மிரட்டி மாமூல் வாங்கவும், சட்டவிரோதமாக டாஸ்மாக் நடத்தவும் முழு சுதந்திரம் கொடுப்பது தான் அனைவருக்குமான ஆட்சியா?
ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதாக பெருமை பீற்றிக் கொண்ட தவெக அரசு, அவற்றில் எத்தனை கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளையறிக்கையை வெளியிட வேண்டும். முந்தைய அரசைப் போலவே வெற்று விளம்பரங்களில் ஆட்சி நடத்துவதை விட, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் தமிழக முதல்-அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.