கள்ளக்குறிச்சியில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டனரா? - தமிழக அரசு விளக்கம்

கள்ளக்குறிச்சியில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டனரா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளை கொண்டு பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்படுவதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது சமூக ஆர்வலர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இது முற்றிலும் தவறான தகவல். கள்ளக்குறிச்சி மாவட்டம் மூரார்பாது அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழாவில் பொதுமக்களால் பூச்செடிகள் வழங்கப்பட்டன. அவற்றை ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் தூய்மை பணியாளர் உதவியுடன் சுற்றுச்சூழல் மன்ற மாணவியர் நட்டனர். இதற்காக ‘தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. இதனை அடையாளம் தெரியாத நபர் வீடியோ எடுத்து மாணவிகள் தூய்மைப்பணி செய்வதாக தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். வதந்திகளை நம்பாதீர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






