3 நாட்களாக மாயம்: பாம்பன் மீனவர்கள் 4 பேர் கதி என்ன? கப்பல், ஹெலிகாப்டர் மூலமாக கடலில் தேடும் பணி தீவிரம்

மீன்பிடிக்க சென்று கடலில் மாயமான பாம்பனை சேர்ந்த 4 மீனவர்களை கடலோர காவல் படை கப்பல், கடற்படை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
3 நாட்களாக மாயம்: பாம்பன் மீனவர்கள் 4 பேர் கதி என்ன? கப்பல், ஹெலிகாப்டர் மூலமாக கடலில் தேடும் பணி தீவிரம்
Published on

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து கடந்த 4-ந் தேதி அன்று, ஒரு பைபர் படகில் ஸ்டீபன், அந்தோணி, வினோன், சிந்தா ஆகிய 4 மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் மறுநாள் கரை திரும்ப வேண்டும். ஆனால் 3 நாட்களாகியும் அந்த மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. மீனவர்களை தேடி பாம்பனில் இருந்து 2-வது நாளாக நேற்று 7 நாட்டுப்படகுளில் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று தேடினர்.

இதை தவிர இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 2 ஹோவர் கிராப்ட் கப்பல்களில் கடலோர காவல் படையினரும், தேடும் பணியில் ஈடுபட்டனர். உச்சிப்புளியில் உள்ள கடற்படை விமான தளத்திலிருந்து இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் ஒன்றும் கடல் பகுதியில் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்த நிலையில் பாம்பனில் உள்ள 4 மீனவர்களின் உறவினர்களை நேற்று மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உடன் நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன், ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ்ரூபன் ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது துணை இயக்குனர் காத்தவராயன் கூறும்போது, பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்று மாயமான 4 மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கப்பல் மூலமாகவும் மற்றும் கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலமும் தேடி வருகின்றனர். இதை தவிர கடலோர காவல் படை மூலம் இலங்கை கடற்படைக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, 4 மீனவர்களை பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

3 நாட்களாகியும் 4 மீனவர்களை பற்றி எந்த தகவலும் இல்லாததால் மீனவர்களின் உறவினர்கள் மிகுந்த சோகம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com