

சென்னை,
திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசியதாகக் கூறப்படும் சர்ச்சை பேச்சு மற்றும் அதனைத் தொடர்ந்து அரங்கேறிய கைது நடவடிக்கைகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதனிடையே, உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், உதயநிதி ஸ்டாலின் பேசிய அதே பனகல் கட்டடம் முன்பு திரண்டு தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோன்று, தஞ்சாவூர் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தஞ்சாவூர் ரெயிலடி முன்பு தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேருந்துகளை மறித்தும் ஈடுபட்டனர்.
தற்போது, உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் ஒன்றுக்கு அழைத்து வரப்படும் நிலையில், நீதிமன்ற வளாகம் மற்றும் பனகல் கட்டடம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிந்துள்ளதாக கூறப்படும் சட்டப்பிரிவுகள்.
BNS,79 - பெண்ணை கண்ணிய குறைவாக பேசுதல்.
BNS, 196 - பகைமையை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்.
BNS,192 - கலவரத்தை தூண்டுதல்.
BNS,296(b) - பொது இடத்தில் அருவருப்பாக பேசுதல்.
BNS,351 - ஒருவருக்கு மிரட்டல் விடுவது.
BNS,352 - பொது அமைதியை சீர்குலைத்தல், ஒருவரை வேண்டுமென்று அவமதித்தல். போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 - பிரிவு 67 - மின்னணு ஊடகங்களில் ஆபாசமான தகவல், படம் அல்லது விடியோவை வெளியிடுதல் அல்லது பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.