எகிறும் எதிர்பார்ப்பு... 'கூலி' படத்தை பார்த்துவிட்டு உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன..?

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்துக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூலி'. நாகார்ஜுனா, சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. பான் இந்தியா படமாக வெளியாகும் 'கூலி' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதேநேரம், நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார். 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியானது. இந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை 170 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. 'கூலி' திரைப்படம் அவரது 171-வது திரைப்படமாகும்.

இந்த நிலையில் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் 'கூலி' திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன். நாளை வெளியாகும் அவருடைய கூலி திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற Mass Enterntainer-ஆக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.

கூலி மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்த் சார், சன் பிக்சர்ஸ், சத்யராஜ் சார், லோகேஷ் கனகராஜ், அமீர்கார் சார், சகோதரர் அனிருத், ஸ்ருதிஹாசன் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com