விஜய் என்ன தவறு செய்தார்?: கரூர் விவகாரத்தில் அவருக்கு துணையாக நான் நிற்பேன் - எச். ராஜா

திமுகவின் கரை வேட்டி கட்டாத உறுப்பினர்களாக கரூர் காவல்துறை அதிகாரிகள் உள்ளனர் என எச். ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளது. ஆனால் இந்த கரூர் விவகாரத்தில் அவருக்கு நான் துணையாக நிற்பேன். விஜய் என்ன தவறு செய்தார்?.விஜய் நான்கு மணி நேரம் பிரசாரக் கூட்டத்திற்கு தாமதமாக வந்தது ஒரு குற்றமா? எம்ஜிஆர் 36 மணி நேரம் தாமதமாக வந்தாலும் மக்கள் காத்திருந்து பார்ப்பதை நேரில் பார்த்தவன் நான். அது ஒரு குற்றம் என்று சொல்ல முடியுமா?
வரும் வழியில் கூட்டம் இருந்திருக்கலாம். அதனால் கூட தாமதம் ஆகியிருக்கலாம். ஆனால் அது கிரிமினல் குற்றம் இல்லை. ஆனால் கரூரில் அந்த இடத்தில் அனுமதி கொடுத்த எஸ்.பி.யை முதலில் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். திமுகவின் கரை வேட்டி கட்டாத உறுப்பினர்களாக கரூர் காவல்துறை அதிகாரிகள் உள்ளனர்.
பேசுனாலே கைது பண்ணுவீர்களா? அப்படினா ஒருநபர் கமிஷன் எதுக்கு? விஜய்க்கு எப்படி குறுகலான இடம் ஒதுக்கலாம்? வேங்கைவயல் சம்பவத்துக்கு திருமாவளவன் நேரில் சென்றாரா? ஆளும் திராவிட அரசுக்கு சொம்படிப்பதை தவிர வேறு வேலையே கிடையாதா அவருக்கு? ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்? திமுகவில் அறிவாலய எடுபிடியாக இருக்கிறார்" என்று காட்டமாக பேசினார்.






