சென்னையில் பொது போக்குவரத்தின் தற்போதைய நிலை என்ன?

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியாததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் பொது போக்குவரத்தின் தற்போதைய நிலை என்ன?
Published on

சென்னை,

சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜம் புயல், தற்போது ஆந்திர கடலோர பகுதியை நோக்கி சென்றது. இதனால், சென்னையில் தற்போது மழை ஓய்ந்தது. எனினும், பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியாததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், சென்னையில் தனிநபர் மற்றும் பொது போக்குவரத்து இரண்டும் முடங்கியுள்ளது. மாநகர பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்படவில்லை. பேருந்துகள் அனைத்தும் பணிமனைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேக்கம் காரணமாக, இருசக்கர வாகனங்களையும் இயக்க முடியாத நிலை உள்ளது.

இதன் காரணமாக, கடைகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்கள், தங்களது இருப்பிடங்களில் இருந்து வேலை நடைபெறும் இடங்களுக்கு செல்லமுடியாத சூழல் உள்ளது.

அதேபோல, ரெயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், ரெயில் போக்குவரத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டது. மின்சார ரெயில்கள் தற்போது வரை இயக்கப்படவில்லை.

மேலும், விமான ஓடுபாதைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்தும் முடங்கியுள்ளது. மெட்ரோ ரெயில்கள் மட்டும் ஞாயிறு கால அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com