அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன...? - மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

திமுக தனித்து 60 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று உள்ளது.
அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன...? - மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக ஒரு புதிய ஆட்சி அமைந்துள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்ற விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சிக்கட்டிலை பிடித்துள்ளது. முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்றுள்ளார்.

தி.மு.க. தனித்து 60 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று உள்ளது. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்து விட்டார். தேர்தல் தோல்வியை அடுத்து சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில் தோல்விக்கான காரணம் என்ன? என்பது குறித்து திமுக தலைமை ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் தோல்விக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தில் பின்னடைவுக்கான காரணங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கட்சியின் அடுத்தக் கட்டப் பணிகள், நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் திமுகவின் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டால், அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com