ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை அல்ல; வரலாற்று புரட்சி: கடம்பூர் ராஜுவுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை அல்ல; வரலாற்று புரட்சி: கடம்பூர் ராஜுவுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்
Published on

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசும்போது, 1998-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க இருந்தது.

நாங்கள் தவறு செய்து விட்டோம். கூட்டணி ஆட்சியில் இருந்துவிட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல இடையில் வந்த சுப்பிரமணியசுவாமி பேச்சை கேட்டு ஒரு ஓட்டில் பா.ஜ.க.வை வீழ்த்தி வரலாற்று பிழை செய்துவிட்டோம். இனி ஒருநாளும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இந்த முடிவு தி.மு.க.வுக்கு சாதகமானது.

அன்றைக்கு பா.ஜ.க. - தி.மு.க. கூட்டணி அமைந்ததன் காரணமாக தான் தி.மு.க. இன்று பொருளாதார வளர்ச்சியில் உள்ளது. தி.மு.க. தமிழகத்தில் வளர பா.ஜ.க. தான் காரணம்.

தி.மு.க.விற்கு அதிகாரம் கொடுத்ததே பா.ஜ.க. தான். அந்த பா.ஜ.க.வை இன்றைக்கு தி.மு.க. தீண்ட தகாத கட்சியாக பார்க்கிறது என்றார். ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளது அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறும்போது, ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை அல்ல. வரலாற்று புரட்சி. கடம்பூர் ராஜு கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பது மிக பெரிய துரோகம் என உணர்ந்து, இதற்கு கடம்பூர் ராஜு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com