

சென்னை,
த.வெ.க. எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ், அண்மையில் செய்தியாளர்களிடம் பேசியபோது 2029 நாடாளுமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என்று தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு த.வெ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்திருந்தது. 2029 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் வேட்பாளர் குறித்து த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கூறுவது அவர்களின் தனிப்பட்ட கருத்து என அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் விஜய் மீது கொண்ட அன்பால் அவ்வாறு கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத ஆட்சியை கொண்டு வந்து, மக்களின் தேவைகளை கேட்டறிந்து செயல்படும் முதல்-அமைச்சராக விஜய் இருக்கிறார். அப்படிப்பட்டவர் இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கருத்தை சொல்கிறார்கள். அவர்கள் கூறுவது அவர்களின் தனிப்பட்ட கருத்துதான். அது கட்சியின் கருத்தோ, அரசாங்கத்தின் கருத்தோ அல்ல.
2029 தேர்தல் வரும்போது, அப்போதைய கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முடிவுகள் எடுக்கப்படும். த.வெ.க. தலைவர், முதல்-அமைச்சர் விஜய் என்ன முடிவெடுக்கிறாரோ, அதன்படி நாங்கள் செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.