"யூடியூபர் இர்பான் செய்தது கொலை குற்றமில்லை.." - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பிரசவ வீடியோ விவகாரம் தொடர்பாக யூடியூபர் இர்பானுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கோவை,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கோவை சென்றிருந்தார். அங்கு பல மருத்துவமனைகளில் அவர் திடீரென்று ஆய்வு நடத்தினார். கோவை அரசு மருத்துவமனையில் புதிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவியின் சேவையை அவர் நேற்று தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "கோவை அரசு மருத்துவமனையில், ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் ரூ.13 கோடியில் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவி புதிதாக வாங்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப் பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை தற்போது 4,500 ஆக உயர்ந்து உள்ளது.

தமிழ்நாட்டில் 500 இடங்களில் புதிதாக நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் திறக்கப்பட்டது. இதில், கோவை மாநகராட்சி பகுதியில் 45 மையங்கள் திறக்கப்பட்டன. இந்த மையங்களில் ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு ஆய்வாளர், ஒரு மருந்தாளுனர் என 4 பணியிடங்கள் நிரப்பப்பட்டது.இந்த மையத்தில் டாக்டர்கள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பணியாற்ற வேண்டும்.

கோவை மாநகராட்சி பகுதியில் 4 இடங்களில் ஆய்வு செய்தபோது 2 நல்வாழ்வு மையங்களில் ஒன்றில் டாக்டர் அருகில் சென்று இருப்பதாகவும், மற்றொன்றில் டாக்டர் அனுமதி பெற்று விடுப்பில் இருந்ததாகவும் கூறினர். இதுதொடர்பாக விசாரணை செய்ய மாநகராட்சி ஆணையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதார அலுவலர்கள் காலை, மாலை நேரத்தில் டாக்டர்கள் வருகை குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆய்வின் போது பணியில் இல்லாத டாக்டர்கள் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுவா" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இதனையடுத்து செய்தியாளர்கள் யூடியூபர் இர்பான் மீதான நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "இர்பானுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் கொலை குற்றமில்லை. இது பெரிய விசயமல்ல" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com