

தேனி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் தாசில்தார் நகரை சேர்ந்தவர் பிலவேந்திரராஜா (வயது 33). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி பாத்திமா மேரி என்ற வானரசி (30). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 3-வதாக பாத்திமா மேரி கர்ப்பம் ஆனார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து பாத்திமா மேரியை, அவருடைய குடும்பத்தினர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
நள்ளிரவில் பாத்திமா மேரிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை எடை குறைவாக இருப்பதாக கூறிய மருத்துவக்குழுவினர், பிறக்கும் போதே இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்ட பாத்திமாமேரியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அந்த குழந்தை, ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு நேற்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் கண்ணீருடன் உடலை பெற்றுக்கொண்டனர்.
பின்னர் குழந்தையின் உடலை அடக்கம் செய்வதற்கான முயற்சியில் உறவினர்கள் ஈடுபட்டனர். அதன்படி பெரியகுளம்-தேனி சாலையில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு உறவினர்கள் குழந்தையை எடுத்து சென்றனர்.
அங்கு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தபோது, குழந்தையின் கைகள் திடீரென அசைந்தன. இதை பார்த்த உறவினர்கள், இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக குழந்தையை மீண்டும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு சென்றனர்.
இறந்ததாக ஒப்படைக்கப்பட்ட குழந்தை, மீண்டும் உயிருடன் கொண்டு வரப்பட்டதை கண்டு மருத்துவக்குழுவினரயைம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் குழந்தை இறந்ததாக கூறி அலட்சியமாக இருந்த டாக்டர் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
700 கிராம் எடையுள்ள அக்குழந்தைக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது. இத்தகவலை மருத்துவமனை டீன் பாலாஜி நாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிருள்ள குழந்தையை இறந்ததாக கூறி ஒப்படைத்த விவகாரம் தொடர்பாக பிரசவத்தின் போது பணிபுரிந்த டாக்டர், உதவியாளர், செவிலியருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் வழங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.