

சென்னை,
இந்திய தேர்தல் ஆணையம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து தபால் வாக்குகள் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பட்டியலை தொகுதி வாரியாக வழங்க கோரி, திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் இறுதி வாக்காளர் பட்டியலைப் பெற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உரிமை உள்ளது என்றும், அதன் அடிப்படையில், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் பட்டியலை வழங்கக் கோரி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனு அனுப்பியும் பதில் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்தபால் வாக்காளர் பட்டியல் எப்போது அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக பதில்மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தபால் வாக்குகள் பதிவு செய்ய எப்போது விண்ணப்பம் பெறப்படும்? எப்போது அதன் மீது முடிவெடுக்கப்படும்? எப்போது அந்த பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என்பது குறித்து விரிவாக எழுத்துப்பூர்வமான பதில் மனுவை வரும் பிப்ரவரி 19-ம் தேதி தாக்கல் செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்ரவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.