சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு? - எடப்பாடி பழனிசாமி

கோப்புப்படம்
போதைப்பொருள் புழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் ரெயிலில், கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த 17 வயதுள்ள 4 சிறுவர்களைத் தடுத்த சுராஜ் என்ற வடமாநில இளைஞரை, சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த தாக்குதல் தொடர்பான காணொளியைக் காண நெஞ்சம் பதைக்கிறது. படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டை இப்படி ஒரு கொடூர நிலைக்கு ஸ்டாலினின் திமுக அரசு தள்ளிவிட்டதே என்ற கோபம் தான் மேலோங்குகிறது.
அரிவாளால் தாக்கிய சிறுவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு? இந்த பொம்மை முதல்வர் தானே? மாநிலத்தின் எதிர்காலத்தை இப்படி சீர்குலைத்து விட்டு, எத்தனை மேடை ஏறி, என்ன பெருமை பேசி என்ன பயன் ஸ்டாலின் அவர்களே?
கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், இந்த அளவுக்கு ஒரு சம்பவம் நடக்க மூலக் காரணமான சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும், போதைப்பொருள் புழக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






