டிடிவி தினகரனை சந்தித்தது ஏன்? அண்ணாமலை விளக்கம்

பரபரப்பான அரசியல் சூழலில் நேற்று டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்து பேசியிருந்தார்.
சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி தினகரன் அறிவித்த போது நான் சென்னைக்குக் வெளியே இருந்தேன். திமுக கூட்டணியை வீழ்த்த என்ன செய்ய வேண்டும், அதில் டிடிவி தினகரனின் பார்வை குறித்து பேசினோம். அரசியல் களம் சூடுபிடிக்கும் போது சில மனஸ்தாபங்கள் மாறும் என நினைக்கிறேன். இன்னும் காலம் இருக்கிறது… காத்திருப்போம். அரசியலில் கூட்டணி என்பது மாறும்.முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தையும் சந்திக்க வேண்டும். சுற்றுப்பயணம் முடிந்து வந்ததும் சந்திப்பேன். முதல்வர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்த விஜயின் கருத்தை வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டில் யாராவது குரல் கொடுக்க ஆரம்பித்தால் ‘பாஜகவின் பி-டீம்’ என்கிறார்கள். விஜய்க்கு வாய் இருக்கிறது, அவர் பேசுவார். சபாநாயகர் அப்பாவு, பாஜக போபியாவில் இருந்து வெளியே வர வேண்டும். ரஜினியை மாதம் ஒருமுறை சந்திப்பேன். ஆன்மீகம் பற்றி பேசுவோம்.” என்றார்.
முன்னதாக நேற்று பாதுகாப்பு வாகனங்களை தவிர்த்துவிட்டு, மாற்றுக் காரில் அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டுக்கு அண்ணாமலை சென்றார். அங்கு டிடிவி தினகரனுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சந்திப்பின்போது, கூட்டணியில் தொடர்ந்து இருக்குமாறு தினகரனை அண்ணாமலை கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அப்போது, பழனிசாமியை தேஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்பதில் டிடிவி தினகரனும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது.






