தலையணையால் முகத்தை அழுத்தி 2 மகன்களை கொன்றது ஏன்?

கச்சிராயப்பாளையம் அருகே தலையணையால் முகத்தை அழுத்தி 2 மகன்களை கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தலையணையால் முகத்தை அழுத்தி 2 மகன்களை கொன்றது ஏன்?
Published on

கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் சுரேஷ் (வயது 30). தொழிலாளி. இவரது மனைவி சரிதா. இவர்களுக்கு விஷ்ணு (9), கேசவ் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சரிதா தனது கணவர் மற்றும் மகன்களை பிரிந்து செங்கல்பட்டு மாவட்டம் கங்கதேவன்குப்பம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த விஷ்ணு மற்றும் கேசவை சுரேஷ் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றார். இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, பிரதாப் ஆகியோர் தலைமையிலான போலீசார் சுரேசை தேடிவந்தனர்.

நடத்தையில் சந்தேகம்

இதில் கங்கதேவன்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே பதுங்கி இருந்த சுரேசை போலீசார் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து சுரேஷ் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நானும், சரிதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இந்த நிலையில் எனது நடத்தையில் சரிதா சந்தேகப்பட்டு வந்தார். இதன் காரணமாக எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் நான் நிம்மதி இன்றி தவித்து வந்தேன். இந்த நிலையில்

சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் என்னிடம் கோபித்து கொண்டு சரிதா அவரது தாய் வீட்டுக்கு சென்றார்.

தற்கொலை செய்துகொள்ள முடிவு

இதில் மனமுடைந்த நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால் நான் சென்றுவிட்டால், குழந்தைகள் அனாதை ஆகிவிடுவார்கள் என கருதினேன். எனவே வரும் காலத்தில் எனது குழந்தைகள் கஷ்டபடக்கூடாது என்பதற்காக அவர்களை கொன்றுவிட்டு அதன்பிறகு நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். அதன்படி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த எனது மகன்களின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தினேன். இதில் மூச்சித்திணறி அவர்கள் இறந்தனர். பின்னர் நான் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். எனக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு எனது மனைவி தான் காரணம். எனவே அவரையும் கொன்று விட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி நான் எனது மாமியார் வீட்டுக்கு புறப்பட்டு சென்றேன். அப்போது என்னை போலீசார் கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com