

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவினை ஏற்று முதல்அமைச்சர் மீதும், அமைச்சர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய காவல்துறை இவ்வளவு தயங்குவது ஏன்? வழக்குப்பதிவு செய்வதற்கு தடையாக இருப்பது யார்? மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள இந்த உத்தரவின் நகல் தலைமைச் செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளதால், ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற தலைமைச் செயலாளர் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது எல்லாம் அடுத்தடுத்த கேள்விகளாக எழுகிறது.
ஆகவே, ஜனநாயகத்தின் எஜமானர்களாகத் திகழும் வாக்காளர்களை விலைகொடுத்து வாங்கிய குற்றத்திற்கு உள்ளான முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீதான தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று, இந்திய தண்டனைச் சட்ட பிரிவின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.
மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் உத்தரவினை நிறைவேற்ற இனியும் தவறினால், தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்படும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.