அணில் ஏன் அங்கிள்... அங்கிள் என்று கத்துகிறது: விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்

அணில் ஏன் அங்கிள், அங்கிள் என்று கத்துகிறது. அது ஜங்கிள், ஜங்கிள் தான் கத்த வேண்டும் என்று சீமான் விமர்சித்துள்ளார்.
சென்னை,
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழக முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசினார். ஸ்டாலின் அங்கிள் என பலமுறை குறிப்பிட்டு விஜய் விமர்சித்தார். விஜய்யின் இந்தப் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தனர்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் விஜய்யின் இந்தப் பேச்சை விமர்சித்திருந்தார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் விஜய் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சீமான் கூறியதாவது: -
அணில் ஏன் அங்கிள், அங்கிள் என்று கத்துகிறது. அது ஜங்கிள், ஜங்கிள் தான் கத்த வேண்டும். கடந்த மாநாட்டில் சிஎம் சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிள் ஆனார். நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலும் லஞ்சமும் ஒரு நிமிடத்தில் ஒழியும். கோடி, கோடியாக பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை. எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்தபோது அதிமுக யாரிடம் இருந்தது என விஜய் ஏன் கேட்கவில்லை?” இவ்வாறு அவர் கூறினார்.






