

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், முதலில் 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள விஜய், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில், காங்கிரஸ் ஆதரவு மூலம் தவெக பலம் 112 ஆக உயர்ந்தது.
தலா 2 இடங்களை வைத்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், தவெக கூட்டணியின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் அர்லேகரை சந்தித்து விஜய் கடிதம் வழங்கினார். ஆனால், ‘ஆட்சி அமைக்கத் தேவையான 118 உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பித்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஆளுநர் உறுதிபடத் தெரிவித்தார்.
மூன்று முறை கவர்னரை விஜய் சந்தித்துவிட்ட நிலையில், இதுவரை ஆட்சி அமைக்க அழைப்பு வரவில்லை. இதற்கிடையே, விசிகவின் நிலைப்பாடு இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் விசிகவின் நிலைப்பாடு என்ன என்பதை பரபரப்புடன் கவனித்து கொண்டு இருக்கிறது.இதற்கிடையே, கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் இருப்பதற்கு திமுக உள்பட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால், விஜய்யின் தவெக கவர்னரின் செயலை இதுவரை விமர்சிக்கவில்லை. இது குறித்து தவெகவை திமுக விமர்சித்துள்ளது.
அக்கட்சியின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
“புதிய அரசு அமைக்க நடைமுறைகளைத் தொடங்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினமே ஆளுநரை வலியுறுத்தி இருக்கிறார். ‘நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் ஆதரிக்கிறேன்’ என்று கூட்டணி கட்சிகளையும் அழைத்து சொல்லிவிட்டார்.இன்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று கோரும் #குதிரை_பேரம்_ தவெக இதுவரை எதற்காக ஆளுநர் குறித்தோ, பாஜக குறித்தோ ஒரு வார்த்தையும் பேசவில்லை?பாசிச பாயசம் இனிப்பதாலா?எங்கள் தலைவர் தெளிவாக சொன்ன பிறகும் குதிரை பேரம் எதற்கு?பாஜக என்ற வார்த்தையை சொல்ல பயம் எதற்கு?” என்று தெரிவித்துள்ளது.