தமிழகத்தில் பரவலாக மழை: பேரிடரை எதிர்கொள்ள ஆயத்தப் பணிகள் அமைச்சர் அறிக்கை

தமிழகத்தில் பரவலாக மழையின் காரணமாக பேரிடரை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள ஆயத்தப் பணிகள் குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பரவலாக மழை: பேரிடரை எதிர்கொள்ள ஆயத்தப் பணிகள் அமைச்சர் அறிக்கை
Published on

சென்னை,

தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கிறது. தமிழகத்தில் 20-ந் தேதிவரை தென் மேற்கு பருவமழை 65.7 மி.மீ. பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும 85 சதவீதம் கூடுதல் ஆகும்.

இந்த மாதத்தில் சென்னைக்கு இயல்பாக 56 மி.மீ. மழை கிடைக்க பெறும் என்ற நிலையில், 19-ந் தேதியன்று ஒரே நாளில் சென்னை மாவட்டத்தில் 82.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் பதிவான மழையைவிட மிக மிக அதிகம் ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 5.73 மி.மீ. ஆக உள்ளது. அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள மாவட்டங்களாக ராணிப்பேட்டை (44.84 மி.மீ.), திருவள்ளூர் (38.27 மி.மீ.), வேலூர் (38.10 மி.மீ.), சென்னை (35.65 மி.மீ.), காஞ்சீபுரம் (25.82 மி.மீ.), நீலகிரி (16.31 மி.மீ.), கோவை (12.79 மி.மீ.), செங்கல்பட்டு (11.88 மி.மீ.), விழுப்புரம் (6.65 மி.மீ.), திருவண்ணாமலை (5 மி.மீ.) உள்ளன.

புகார் பதிவு

கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதி (78 மி.மீ.), திருவாலங்காடு பகுதி (75 மி.மீ.), பூண்டி பகுதி (66 மி.மீ.), ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதி (77.4 மி.மீ.), வேலூர் மாவட்டம் பொன்னை அணைப் பகுதி (72.6 மி.மீ.), விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதி (68 மி.மீ.) ஆகிய இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது. பரவலாக பெய்து வரும் கன மழையின் காரணமாக மழைநீரை மாநகராட்சிகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் போர்க்கால அடிப்படையில் வெளியேற்றுகின்றன.

பொதுமக்கள் மழை வெள்ளம் தொடர்பான புகார்களை பதிவு செய்வதற்காக சென்னையில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்டங்களில் உள்ள மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்கள் கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. எனவே பொதுமக்கள் மழை வெள்ளம் தொடர்பான தங்களது புகார்களை மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்கள் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். இதுமட்டுமின்றி, 94458 69848 என்ற வாட்ஸ்அப் எண் வாயிலாகவும், டிஎன்எஸ்எம்ஏஆர்டி செயலி மூலமாகவும் பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது தொடர்பான புகார்களை 1913 என்ற எண்ணில் பதிவு செய்யலாம். பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டலக் குழுக்கள் அமைத்து, மழைக் காலங்களில் வரப்பெறும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மீனவர்கள்

கடந்த சில நாட்களில் பெய்த கனமழையின் காரணமாக, செம்பரம்பாக்கம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், 21-ந் தேதி (நேற்று) பகல் 12 மணிக்கு, செம்பரம்பாக்கம் அணையிலிருந்து 250 கன அடி நீர் வெளியேற்றப்பட இருந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள்.

மழைக்காலங்களில் அரசால் வெளியிடப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கவனித்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மீனவர்கள் ஆபத்தான பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com