

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், காணாமல் சென்றதாகக் கூறப்படும் வருவாய் ஆய்வாளரை கண்டுபிடித்து தரக்கோரி அவரது மனைவியும் இரு மகள்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அருகே செஞ்சி பகுதியில் வருவாய்த்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர், கடந்த சில நாட்களாக குடும்பத்தினரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. அவர் தன்னுடன் பணியாற்றிய மற்றொரு வருவாய் ஆய்வாளருடன் பழகி வந்ததாகவும், பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் குடும்பத்தினர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில், கணவர் குடும்பத்தினரை விட்டு சென்றுவிட்டதாக அவரது மனைவி வேதனையுடன் தெரிவித்தார். கணவரை கண்டுபிடித்து, தங்களது குடும்பத்துடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, மனைவியும் அவரது மகள்களும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.