

பவானிசாகர்,
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், கணவனால் இளம் தாய் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் லூர்துகுமார். அவருடைய மனைவி இந்திரகுமாரி. இவர்களுடைய மகள் ரெபேக்கா (வயது 24). இவருக்கும், ராமேசுவரத்தை சேர்ந்த தொழிலாளி பாகபிரகாஷ் (36) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் பாகபிரகாசும், ரெபேக்காவும் ராமேசுவரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், ரெபேக்காவின் நடத்தையில் பாகபிரகாசுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கருத்து வேறுபாடு முற்றியதால், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த ரெபேக்கா, தனது 3 குழந்தைகளுடன் தாய் வீடான பவானிசாகர் முகாமிற்கு வந்துவிட்டார்.
மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரத்தில் இருந்த பாகபிரகாஷ், நேற்று காலை 10 மணி அளவில் ரெபேக்காவை பார்ப்பதற்காக பவானிசாகர் முகாமிற்கு வந்தார். அப்போது ரெபேக்காவிடம், தன்னுடன் மீண்டும் ராமேசுவரத்திற்கு குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். இதற்கு ரெபேக்கா மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற பாகபிரகாஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ரெபேக்காவை சரமாரியாக குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரெபேக்கா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கொலையாளி பாகபிரகாஷை பிடித்து பவானிசாகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப்பதிவு செய்து பாகபிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.