கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொன்று உடலை எரித்த மனைவி போலீசில் சரண்

கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரத்தில் கணவரை கொன்று உடலை எரித்த மனைவி போலீசில் சரண் அடைந்தார்.
கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொன்று உடலை எரித்த மனைவி போலீசில் சரண்
Published on

தாம்பரம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 44). இவருடைய மனைவி விமலா ராணி (35). இவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளார். இவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் உள்ள ஆத்தனஞ்சேரி பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தனர்.

தங்கவேல், ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 31-ந்தேதி தங்கவேலின் தந்தை திருமலையாண்டி (70) மற்றும் சகோதரர் சக்திவேல் (47) ஆகியோர் தங்கவேலின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர்.

அப்போது விமலா ராணி போனை எடுத்து சரியான பதில் கூறாமல் வைத்துவிட்டார். அதன்பிறகு அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

போலீசில் சரண்

இதனால் சந்தேகமடைந்த திருமலையாண்டி, தனது மகன் சக்திவேல் மற்றும் உறவினர்களுடன் ஆத்தனஞ்சேரிக்கு வந்தார். அங்கு தங்கவேலின் வீடு பூட்டி இருந்தது. தங்கவேல், அவருடைய மனைவி, மகன் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் தனது மகன் தங்கவேல், மருமகள், பேரன் ஆகியோர் மாயமானதாக திருமலையாண்டி புகார் செய்தார். அதன்பரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் விமலா ராணி, மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

கள்ளக்காதல்

எனக்கும், சேலத்தைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த எனது கணவர் என்னை கண்டித்தார். கடந்த மாதம் 28-ந் தேதி இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த நானும், எனது கள்ளக்காதலன் ராஜாவும் சேர்ந்து எனது கணவர் தங்கவேலை வெட்டிக்கொலை செய்தோம். பின்னர் அவரது உடலை அச்சரப்பாக்கம் அருகே வனப்பகுதிக்கு கொண்டு சென்று தீ வைத்து எரித்து விட்டோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் இது தொடர்பாக விமலா ராணியை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2-ந்தேதி அச்சரப்பாக்கம் அருகே எரிந்த நிலையில் கரிக்கட்டையாக ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. அது தங்கவேலின் உடலா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தனிப்படை போலீசார் விமலா ராணியின் கள்ளக்காதலன் ராஜா மற்றும் சிலரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com