காட்டு பன்றிகள் அட்டகாசம்; 300 வாழைகள் நாசம்

களக்காட்டில் தோட்டத்தில் காட்டு பன்றிகள் புகுந்து சுமார் 300 வாழைகளை நாசம் செய்தன.
காட்டு பன்றிகள் அட்டகாசம்; 300 வாழைகள் நாசம்
Published on

களக்காடு:

களக்காடு தலையணை மலையடிவாரத்தில் கள்ளியாறு விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழை, நெல் சாகுபடி செய்துள்ளனர். சமீபகாலமாக இப்பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வனப்பகுதியில் இருந்து வெளி வந்த காட்டு பன்றிகள் கூட்டம் களக்காடு நாடார் புதுத்தெருவை சேர்ந்த விவசாயி சுரேஷ் (வயது 58) என்பவருக்கு சொந்தமான விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. மேலும் வாழைகளை சாய்த்து அதன் குருத்துகளை தின்றன. இதனால் ஒரு வாரத்திற்குள் 300-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானதாக விவசாயி சுரேஷ் கவலையுடன் தெரிவித்தார். இந்த வாழைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்தது. 5 மாதமாக கஷ்டப்பட்டு வளர்த்ததாகும். இதனால் அவருக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி களக்காடு வனத்துறை அலுவலகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், அதிகரித்து வரும் காட்டு பன்றிகள் அட்டகாசத்தை தடுக்கவும், பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com