

நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூரில் குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் உலா வரும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை அங்கிருந்த குடியிருப்புவாசி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் பிரம்மாண்ட உருவத்துடன் வலம் வந்த காட்டு யானை, பொதுமக்களின் சத்தத்தை கேட்டதும் மெதுவாக அங்கிருந்து நகர்ந்து சென்றது. தொடர்ந்து யானைகள் ஊருக்குள் வருவதால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே கூடலூர் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில், வனப்பகுதிக்குள் இருந்து ஊருக்குள் நுழைந்த புலி தாக்கி 2 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மனிதர்களை வேட்டையாடும் புலியை கூண்டு வைத்து சீக்கிரமாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது காட்டு யானை ஊருக்குள் உலா வருவது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் வனத்துறையினர் தொடர்ந்து டிரோன் கேமராக்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.