

திருச்சி,
சட்டமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, முதல்-அமைச்சர் விஜய் இன்று மாலை தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார். திருச்சிக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் விஜய்யை மதிமுக எம்.பி. துரை வைகோ, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. துரை வைகோ தெரிவித்ததாவது:-
புதிய அரசுக்கு கால அவகாசம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ மாற்றங்களை நாம் உருவாக்க முடியாது. குறைந்தபட்சம் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை கொடுத்தால்தான் புதிய அரசாங்கத்தால் மாற்றங்களை உருவாக்க முடியும் என்பது எனது கருத்து.
எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் துரதிருஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டார்கள். எனவே ஆதரவு கொடுக்கக்கூடிய சூழ்நிலை எங்களுக்கு கிடையாது. ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஐ.யு.எம்.எல் உள்ளிட்ட இயக்கங்கள் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.
27-ந்தேதி மதிமுக பொதுக்குழு கூட்டப்படுகிறது. பொதுக்குழுவில் திமுக கூட்டணியில் தொடர வேண்டுமா என்பது கேட்கப்பட்டு, நிர்வாகிகளின் மனநிலைப்படி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.