கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின் தைப்பூச விழாவில் பங்கேற்பாரா? - வானதி சீனிவாசன் கேள்வி

தமிழ்நாட்டின் அமைதியை சீ்ர்குலைக்க நினைப்பது திமுக அரசுதான் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
சென்னை,
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற (டிசம்பர் 20) கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "எந்த மதங்கள் சார்ந்தும், எந்த பாகுபாடும் இல்லாமல் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம். திருப்பணி செய்கிறோம். இது சிலரின் கண்களை உறுத்துகிறது. தமிழ்நாட்டின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம் என்று பலர் யோசிக்கிறார்கள். மதத்தின் பெயரில் உணர்வுகளை துாண்டுபவர்களை சந்தேகப்படுங்கள். கவனமாக இருங்கள்" என வசனம் பேசியிருக்கிறார்.
மதங்களுக்கு இடையே பாகுபாடு பார்ப்பதும், மத உணர்வுகளைத் தூண்டி வாக்கு அறுவடை செய்வதும் திமுக என்பதுதான் கடந்த கால வரலாறு. கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டுகிறோம். ஆனால், அவர் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம் போன்ற இந்துக்களின் பண்டிகைகளில் பங்கேற்பதில்லை. குறைந்தபட்சம் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்வதில்லை. இதுபற்றி சட்டமன்றத்தில் பேசினால், சபாநாயகர் அப்பாவு அவர்கள் அனுமதிப்பதில்லை. இது மதங்களுக்கு இடையிலான பாகுபாடு இல்லையா?.
வரும் பிப்ரவரி 1-ம் தேதி தமிழ்க் கடவுள் எனப் போற்றப்படும் முருகப் பெருமானின் தைப்பூசம் வருகிறது. அந்த விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா?. இந்து கோவில்களுக்கு திருப்பணி செய்வது திமுகவோ, அரசோ அல்ல. இந்துக்களின் காணிக்கையில், நன்கொடையில்தான் திருப்பணி நடக்கிறது. இந்துக்கள் தங்களது கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி கேட்க வேண்டிய அவலம் உள்ளது. அப்படி கேட்டால் லஞ்சம் கேட்கிறார்கள். இதுதான் அனைத்து மதங்களையும் சமமாக நடத்தும் லட்சணமா?
தமிழ்நாட்டின் அமைதியை சீ்ர்குலைக்க நினைப்பது திமுக அரசுதான். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்தாமல் அராஜகத்தில் ஈடுபட்டது திமுக அரசு. இதுதான் திமுகவின் மதச்சார்பின்மையா?. கிறிஸ்துமஸ் விழாவில் இயேசு கிறிஸ்துவின் அன்பை, அவரது போதனைகளை பேசாமல், மத மோதலை ஏற்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மீண்டுமொரு முறை இந்து மக்களின் விரோதி என நிரூபித்த முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






