ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி ரத்து: திமுகவில் இணைகிறார் ஓபிஎஸ்?

ஜெயலலிதா பிறந்தநாளில் வழக்கமாக சென்னையில் அமைந்துள்ள சிலைக்கு ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்துவார்.
ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி ரத்து: திமுகவில் இணைகிறார் ஓபிஎஸ்?
Published on

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பிறந்தாள் விழாவில் கலந்துகொள்வதற்காக கட்சி அலுவலகத்திற்கு வருகை தருகிறார்.

அப்போது அவருக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். இதை தொடர்ந்து மறைந்த அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியையும் ஏற்றி வைக்கிறார்.

இந்தநிலையில் கடற்கரையில் இருக்ககூடிய, உயர் கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதா அவர்களுடைய முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் முழு உருவசிலைக்கு, மரியாதை செலுத்துவதுதான் அவருடைய வழக்கமாக இருந்து வந்தது.

அதன்படி கடந்த 19-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம், ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அதன்படி, வரக்கூடிய ஜெயலலிதாவுடைய 78-வது பிறந்தநாளில் வழக்கம்போன்று, இந்த ஆண்டிலும் அவருடைய முழு உருவ சிலைக்கு மாலை, அணிவித்து மரியாதை செய்யப்படும் என்கின்ற தகவலை வெளியிடிருந்தார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம், நாளை சென்னையில் ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்தக்கூடிய அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஏற்கனவே அவர் வெளியிட்டிருந்த அறிக்கை திரும்ப பெறப்பட்டு புதிய அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. போடி சட்டமன்ற, தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில், ஜெயலலிதாவினுடைய படத்திற்கும் மட்டும், அவர் மலர் தூவி மரியாதை செலுத்துவார் என்று அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.

19-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை ஓ.பன்னீர் செல்வம் தற்பொழுது திடீரென்று திரும்ப பெற்று, இருப்பது அவர் விரைவில் திமுகவில் இணையக்கூடும் என எதிர்பாடுக்கப்படும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் ஐக்கியம் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com