

தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. காரணம் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும் தண்ணீர் இந்த ஆண்டு திறக்கப்பட வில்லை. இதனால் ஆழ்துளை கிணறு மூலம் பாசனம் நடை பெறும் இடங்களில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது குறுவை சாகுபடி செய்த வயல்களில் அறுவடை பணிகள் இறுதிக்கட்டதை எட்டி உள்ளது.
இதற்கிடையே சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு தண்ணீர் வழங்கும் வகையில் கடந்த 1-ந் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த 5-ந் தேதி கல்லணையை வந்தடைந்தது. இதையடுத்து மறுநாள் 6-ந் தேதி கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், சம்பா சாகுபடியை தொடங்குவதற்கான நம்பிக்கை விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா, தாளடி சாகுபடி 3.12 லட்சம் ஏக்கரில் நடைபெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சூரக்கோட்டை, மடிகை, துறையூர், வாளமரக்கோட்டை, வரவுக்கோட்டை, காட்டூர், கல்விராயன்பேட்டை, ஆலக்குடி, சித்திரக்குடி, டவுன்கரம்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் வயல்களை உழுது நிலத்தை சாகுபடிக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தி வருகின்றனர். சில விவசாயிகள் நேரடி நெல் விதைப்புக்காகவும் நிலத்தை தயார் செய்து வருகிறார்கள்.
ஒரு சில விவசாயிகள், ஆற்றில் இருந்து வாய்க்கால்களுக்கு போதிய அளவு தண்ணீர் வருவதை எதிர்பார்த்து, வயல்களில் இயற்கை எருவை குவித்து வைத்துள்ளனர். வயலுக்கு தண்ணீர் கிடைத்தவுடன் எருவை பரப்பி உழவு பணிகளை மேற் கொள்ள திட்டமிட்டுள்ளனர். சில விவசாயிகள் விலைக்கு இயற்கை உரமான எருவை வாங்கி நிலத்தில் குவித்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சமீப நாட்களில் ஓரளவு மழை பெய்திருப்பதால் வயல்களில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. தற்போது கல்லணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வாய்க்கால்கள் வழியாக வயல்களுக்கு வந்து சேரும் பட்சத்தில் சம்பா சாகுபடி பணிகளை வேகப்படுத்துவோம்.
இருப்பினும் சம்பா சாகுபடிக்கு தொடர்ந்து தண்ணீர் கிடைக்க வேண்டுமென்றால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிக்க வேண்டும். பருவமழையும் கைகொடுக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி வயலை தயார்படுத்தும் பணி களை மட்டும் மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.