

சென்னை,
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பாஜக 30 தொகுதிகளை கேட்பதால் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பணிகளை மேற்கொள்ள தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று இரவு சென்னை வருவதாக இருந்தது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லி பயணம் செல்கிறார். இதற்காக காலை 10 மணியளவில் அவர் டெல்லிக்கு புறப்பட்டார். இதையடுத்து பியூஷ் கோயலின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் தொகுதி பங்கீடு தொடர்பாக அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.