தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா? - சட்டசபையில் விவாதம்

தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா? - சட்டசபையில் விவாதம்

தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா? என்பது குறித்து சட்டசபையில் விவாதம் நடந்தது.
Published on

சென்னை,

தமிழக சட்டசபையின் இன்றைய கேள்வி நேரத்தின்போது நாங்குநேரியில் பனைப் பொருட்களுக்கான நவீன விற்பனை காட்சிக் கூடம் அமைக்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த  அமைச்சர் பொன்முடி, 376 பனை வெல்லம் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள், 8 மாவட்ட பனை வெல்லம் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. பனை மரம் வளர்ப்போர் வளர்ச்சிக்கு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அதுபோல் நாங்குநேரியில் பனை பொருட்களுக்கான நவீன விற்பனை காட்சிக்கூடம் அமைக்க அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பனை கள்ளுக்கு   விதித்துள்ள தடையை நீக்க அரசு முன்வருமா? என்று ரூபி மனோகரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, பனையிலிருந்து பதனீர் இறக்கும் போது கலக்க வேண்டியதை கலந்து விட்டால் போதை பொருளாக மாறிவிடும். பனை பொருட்கள் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக விற்பபனை செய்யப்பட்டு வருகிறது. கள் இறக்குவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்காலத்தில் பரிசீலிப்பார் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய அசோகன், பதநீர் 2 நாட்களை கடந்தால் கள்ளாக மாறுகிறது. இதனால் கள்ளுனு வழக்கு போடாமல், தற்போது கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக வழக்கு போடுகிறார்கள். இதனை கவனத்தில் கொண்டு, வழக்குபோடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, கைது செய்பவர்கள் குறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி நல்ல முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், சபாநாயகர் கள் குறித்து பேசுவதை பார்த்தாலே இதில் அவருக்கு எவ்வளவு ஆர்வம் உள்ளது என தெரிகிறது என்று தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com