3-வது மொழி கட்டாயமல்ல என்று தெளிவான வழிகாட்டுதலை மத்திய அரசு வழங்குமா? - மு.க.ஸ்டாலின் கேள்வி

கோப்புப்படம்
மராட்டியத்தில் மராட்டி மட்டுமே கட்டாய மொழி என அம்மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மராட்டியத்தில் இந்தியைக் கட்டாய மூன்றாவது மொழியாகத் திணித்ததற்காகக் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மராட்டிய மாநிலத்தில் மராட்டி மட்டுமே கட்டாய மொழி எனக் கூறுகிறார் அம்மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிப்பதற்கு எதிராக, மிகப் பரவலாக மக்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்ததன் விளைவாக உருவான நடுக்கத்தின் வெளிப்பாடுதான் அவரது இந்தப் பேட்டி.
இந்நிலையில், பிரதமரும், மத்திய கல்வி மந்திரியும் பின்வருவனவற்றைத் தெளிவுபடுத்திட வேண்டும்:
தேசிய கல்விக் கொள்கையின்கீழ், மராட்டியத்தில் மராட்டியைத் தவிர வேறு எந்த மூன்றாவது மொழியும் கட்டாயமல்ல எனும் பட்னாவிசின் நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்கிறதா?
எனில், தேசிய கல்விக் கொள்கையின்படி, மூன்றாவது மொழியைப் பயிற்றுவிப்பது கட்டாயமல்ல என்று தெளிவான வழிகாட்டுதலை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குமா? மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக அநியாயமாக தமிழ்நாட்டுக்குத் தராமல் நிறுத்தி வைத்திருக்கும் 2,152 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்குமா? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.