

சென்னை,
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 31-ந் தேதிவரை ஊரடங்கு நீட்டிக் கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அனுமதித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் சவாலாகவே உள்ளது. தற்போது தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இ-பாஸ் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இதை பின்பற்றும்பட்சத்தில் மக்களின் நடமாட்டம் அதிகமாகி, தொற்று எண்ணிக்கை உயரவும் வாய்ப்புள்ளதாக அரசு கருதுகிறது. இதுபற்றி ஆலோசிக்க இன்று காலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொற்று நிலவரம் குறித்து அவர் ஆய்வு மேற்கொள்வார்.
மேலும் இன்று பிற்பகலில் மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்வார். தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்த கூட்டங்களில் நடத்தப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் முக்கிய முடிவுகளை அரசு எடுக்கும் என்று தெரிகிறது.
இன்னும் 2 நாட்களில் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது. அதை செப்டம்பர் மாதத்துக்கும் நீடிக்க வேண்டுமா? அப்படி நீடித்தால் என்னென்ன தளர்வுகளை மேலும் அளிக்க வேண்டும்? பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க வாய்ப்புள்ளதா? என்பது பற்றிய அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் வெளியிட இருக்கிறார்.