குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

கூத்தாநல்லூர் அருக குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
Published on

வாகன ஓட்டிகள் சிரமம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகட்டளை மாரியம்மன் கோவிலில் இருந்து கீழபனங்காட்டாங்குடி வரை உள்ள சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாகவும், குறுகலான சாலையாகவும் இருந்தது. இதனால் அந்த குறுகலான சாலையில் சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை அகலப்படுத்தி முழுமையான தார்சாலையாக சீரமைக்கப்பட்டது.

சாலையில் பள்ளம்

வெள்ளையாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த சாலை கூத்தாநல்லூர், மன்னார்குடி, திருவாரூர் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் வழித்தடம் என்பதால் இந்த சாலையில் கார், வேன், ஆட்டோ, பள்ளி வாகனங்கள், லாரி, டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. கடந்த ஆண்டு இந்த சாலையில் உள்ள கானூர் என்ற இடத்தில் ஆற்றின் கரையோரம் மண் சரிந்ததில் சிறிது தூரம் வரை பள்ளம் ஏற்பட்டது.

சீரமைக்க வேண்டும்

இதனால் வாகனங்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமம் அடைந்தன. இதனையடுத்து ஆற்றின் கரையோரமும், சேதமடைந்த சாலையிலும் மணல், ஜல்லிகள் கொட்டி சீரமைக்கப்பட்டது. ஆனால் அந்த சாலை கடந்த சில மாதங்களாக மேலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை நேரத்தில் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலை வழியாக செல்லும் போது கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சேதமடைந்த குண்டும், குழியுமான சாலையை தார்சாலையாக சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com