த.வெ.க. ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவு தொடருமா..? - என்ன சொல்கிறது சி.பி.எம்..?

த.வெ.க.வுக்கு ஆதரவு இல்லை என்பதால் தி.மு.க.வுக்கு ஆதரவு என்று அர்த்தம் இல்லை என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
த.வெ.க. ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவு தொடருமா..? - என்ன சொல்கிறது சி.பி.எம்..?
Published on

சென்னை,

தமிழகத்தில் த.வெ.க. தலைமையில் நடைபெறும் கூட்டணி ஆட்சிக்கு மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. இந்த நிலையில், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ளது.

சிபிஎம், சிபிஐ போட்டி

இந்த இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து அக்கட்சிகளின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இடைத்தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன்படி, மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) போட்டியிடும். தாராபுரம் இடைத்தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) போட்டியிடும். இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை மறுதினம் (15-ந்தேதி) அறிவிக்கப்படுவார்கள்.

இந்த இடைத்தேர்தல் இயல்பானது அல்ல; திணிக்கப்பட்ட ஒன்று. நாங்கள் யாருடைய கூட்டணியிலும் இல்லை; கவர்னர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம். மதச்சார்பின்மைக்கு எதிராக தவெக அரசு உறுதியாக இருக்க வேண்டும். தவெக ஆட்சிக்கான ஆதரவு தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதிப்பு வராது

இந்நிலையில் த.வெ.க. ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவு தொடருமா..? என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இடதுசாரிகள் இணைந்து இடைத்தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளோம். இதன்படி இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டியிட உள்ளது. மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி போட்டியிடும். தாராபுரத்தில் இந்திய கம்யூ. கட்சி போட்டியிடும். த.வெ.க.வுக்கு ஆதரவு இல்லை என்பதால் தி.மு.க.வுக்கு ஆதரவு என்று அர்த்தம் இல்லை. இடைத்தேர்தலில் இடதுசாரிகளுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். வேட்பாளர்கள் குறித்து நாளை மறுநாள் அறிவிக்கப்படும்

த.வெ.க. ஆட்சிக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும். தனித்து போட்டி என்ற எங்கள் முடிவால் த.வெ.க. ஆட்சிக்கு பாதிப்பு வராது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com