குமரெட்டியாபுரம் மக்களுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் குமரெட்டியாபுரம் மக்களுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் கூறி உள்ளார். #SterliteProtest
குமரெட்டியாபுரம் மக்களுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதோடு அப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களும் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதையடுத்து அ.குமரெட்டியாபுரம் பொதுமக்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். பொதுமக்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே போராட்டக்குழு சார்பாக தூத்துக்குடியில் பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அ.குமரெட்டியா புரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களை அரசியல் கட்சியினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, ச.ம.க. தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோர் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

நேற்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் நடந்து வரும் தொடர் போராட்டத்தில் கலந்து கொண்டார். அவர் மக்களோடு மக்களாக அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறிய அவர் மக்களோடு இணைந்து தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்களின் தொடர் போராட்டம் இன்று 50-வது நாளை எட்டியது. இன்றும் ஏராளமான ஆண்களும், பெண்களும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட் டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். கண்டன கோஷங்களும் எழுப்பினர்.

போராட்டம் நடைபெறும் மரத்தின் அடியில் இன்று 50-வது நாள் என போர்டு எழுதி போட்டுள்ளனர். இன்றைய போராட்டத்தில் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அருகில் உள்ள பண்டாரம்பட்டி கிராம மக்களும் நேற்று மாலை போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களது போராட்டம் இன்று 2-வது நாளாக நடந்து வரு கிறது.

இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 4 நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று காலை கல்லூரிக்கு வந்த தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர். பின்பு கல்லூரியின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.இதில் மாணவிகளும் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினார்கள்.

இதே போல மற்ற கல்லூரிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்த கூடும் என அறிந்து அந்த கல்லூரிகளில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டனர். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. இதில் அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் இருந்து திரண்டு வந்த பெண்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு மனு கொடுத்தனர்.

மேலும் வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி மனு கொடுத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் குமரெட்டியாபுரம் மக்களுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் கூறி உள்ளார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் அடுத்தக்கட்ட முடிவை தமிழக அரசு எடுக்கும் என அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com