மு.க.ஸ்டாலின் இசட் பாதுகாப்பு வாபஸ்: தலைவர்களின் பாதுகாப்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சி கூடாது - நெல்லை முபாரக்

தினமும் ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்கும் இத்தகைய மக்கள் தலைவர்களின் பாதுகாப்பு என்பது சமரசத்திற்கு அப்பாற்பட்டது என்று நெல்லை முபாரக் தெரிவித்தார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
நெல்லை முபாரக்
Published on

சென்னை,

​மக்கள் தலைவர்களின் பாதுகாப்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளோ, உள்நோக்கங்களோ துளியும் தலைதூக்கக் கூடாது என்று நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

அதிர்ச்சி

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இதுவரை வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.

பாதுகாப்பு

​ஒரு மாநிலத்தின் மிக முக்கிய அரசியல் தலைவராகவும், பிரதான எதிர்க்கட்சி தலைவராகவும் மக்கள் பணியில் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் மு.க.ஸ்டாலின் பொதுவெளியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்கும் இத்தகைய மக்கள் தலைவர்களின் பாதுகாப்பு என்பது சமரசத்திற்கு அப்பாற்பட்டது.

அரசியல் உள்நோக்கம்

​சமகால அரசியல் சூழலில் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இன்றியமையாத தேவையாக உள்ள நிலையில், திடீரென பாதுகாப்பை குறைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதோ என்ற நியாயமான சந்தேகத்தை எழ செய்கிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

​மக்கள் தலைவர்களின் பாதுகாப்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளோ, உள்நோக்கங்களோ துளியும் தலைதூக்கக் கூடாது. மாற்றுக் கருத்துகள், அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, மு.க.ஸ்டாலின் மக்கள் தொடர்பையும் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அதே முழுமையான இசட் பிரிவு பாதுகாப்பை தாமதமின்றி மீண்டும் வழங்கிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com